27/12/2024
மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு:
சனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
------------------------------------------------
உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநரும் மேனாள் இந்திய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. மன்மோகன் சிங் அவர்கள் இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதிலும்; இந்தியாவைபொருளாதாரத்தில் வலிமைபெறச் செய்வதிலும் மிக கவனமாகவும் உறுதியாகவும் இருந்தார். குறிப்பாக, இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதற்கு ஏதுவாக தாராளமய பொருளாதார நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர்.
திரு. நரசிம்மராவ் அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் இந்தியாவில் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகுந்த நெருக்கடியில் இருந்த இந்தியப் பொருளாதாரம் அதனால்தான் மீட்கப்பட்டது எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆற்றல் பெற்ற அவருடைய மறைவு இந்திய தேசத்துக்கு, குறிப்பாக , இந்திய சனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற போது, எவரும் எதிர்பாராத வகையில் திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமர் ஆக்கப்பட்டார். இந்தியாவில் சீக்கிய- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனது அதுவே முதல் முறையாகும்.
2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை
10 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பேற்று அவர் நடத்திய ஆட்சியே அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பானதாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயர் வருமான வரம்பை 4.5 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக உயர்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினோம். அதன் பின்னர்தான் அந்த வருமான வரம்பு ரூ.4.5 இலட்சத்திலிருந்து ரூ. 6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டது.
அவரது முதலாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் அவர் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தால் அவரது அரசுக்கு ஆதரவு அளித்துவந்த இடது சாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர். ஆனாலும் அதற்குப் பிறகு 2009 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறையும் அவர் பிரதமரானார். உணவுப் பாதுகாப்புச் சட்டம்;
கல்வி உரிமைச் சட்டம்;
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம்;
தகவலறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்களுக்கு உதவக்கூடிய பல சட்டங்கள் அவரது ஆட்சியின்போது தான் இயற்றப்பட்டன. அவற்றால் கோடிக் கணக்கான மக்கள் இப்போதும் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியாவின் பிரதமராக இருந்ததோடு இந் நாட்டின் பெருமைமிகுக் குடிமகனாகவும் அவர் போற்றப்பட்டார். பொது வாழ்வில் கண்ணியத்தையும், களங்கப்படுத்த முடியாத நேர்மையையும் கொண்டு, அனைத்துத் தரப்பினரது
நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார்.
அவரது மறைவுக்கு விசிக சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.

15/11/2024
20/10/2024
20/10/2024
20/10/2024