04/02/2025
கோணாவத்தை மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
அட்டாளைச்சேனை, கோணாவத்தை பொது மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் நீண்டகாலமாக பழுதடைந்து காணப்பட்டதனால் மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதி என்பன இருளில் மூழ்கிக் காணப்பட்டன. இதன் காரணமாக இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போதும், குறித்த பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்வோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பினர் திகாமடுல்ல நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி றிசாட் எம் புகாரியின் கவனத்துக்கு குறித்த விடயத்தினை கொண்டு சென்றதனையடுத்து அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் (03) கோணாவத்தை பொது மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதிக்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.
குறித்த மையாவாடியில் பொருத்தப்பட்டிருந்த பல மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதனாலும், எதிர்வரும் நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகை உள்ளிட்ட இரவு நேர வணக்க வழிபாடுகளையும் கருத்திற் கொண்டே குறித்த இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகக் காணப்பட்ட குறித்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.டீ.இர்பான், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் மற்றும் திகாமடுல்ல நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி றிசாட் எம் புகாரி ஆகியோருக்கு செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
04/12/2024
செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
வெள்ள அனர்த்தத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினால் (01) உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் ஆலோசகர் சகோதரர் ஏ.நௌஷாட் (றிம்ஸி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரர் நழீம் லத்தீப் அவர்கள் குறித்த உலருணவுப் பொருட்களை கையளித்திருந்தார்.
செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.நியாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வெள்ள அனர்த்தத்தில் நிர்க்கதிக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு குறித்த உலருணவுப் பொருட்களை வழங்கி உதவிய சகோதரர் நழீம் லத்திப் அவர்களுக்கு செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் சார்பாக நன்றி தெரிவிப்பதுடன் அவருடைய தூய்மையான நோக்கத்துக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்க பிரார்த்திக்கின்றோம்.
அம்பாரை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு சகோதரர் நழீம் லத்திப் உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
12/04/2024
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால்
அட்டாளைச்சேனை
8 மற்றும் 6ஆம் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தின் காரியாலயத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆலோசகர் ஏ.நௌஷாட் (றிம்ஸி) நிறுவனத்தின் பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான், ஊடக இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், மற்றும் சகோதரர் ஏ.எல்.பௌசர், ஜவாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.
இதன்போது வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என ஒரு தொகுதியினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த உலர் உணவுப் பொருட்களை வெற்றிகரமாக வழங்குவதற்கு நிதி மற்றும் பொருட்கள் என பல வழிகளிலும் உதவிபுரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
செக்டோ - ஸ்ரீலங்கா
30/01/2024
செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால்
அட்டாளைச்சேனை
8 மற்றும் 6ஆம் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இன்று (30) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பின் காரியாலயத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.அஸ்ரத், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் எம்.எச்.றம்சான், பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான், அமைப்பாளர் ஏ.எல்.றியாஸ், ஊடக இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், உறுப்பினர் ஏ.எல்.எம்.புஹாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.
இதன்போது வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆலோசகர்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பலரின் உதவியுடன் குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த உலர் உணவுப் பொருட்களை வெற்றிகரமாக வழங்குவதற்கு நிதி மற்றும் பொருட்கள் என பல வழிகளிலும் உதவிபுரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
செக்டோ - ஸ்ரீலங்கா
15/10/2023
புனித அல் குர்ஆனை மனனம் செய்து மண்ணுக்கு மகிமை சேர்த்தார் முஹம்மத் நிப்லாத்...
அட்டாளச்சேனை கோணவத்தையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மத் நிப்லாத் என்பவர் புனித அல் குர்ஆனை மனனம் செய்து தனது குடும்பத்தினருக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஷர்கியா அரபுக் கல்லூரியின் ஹிப்ளுப் பிரிவில் இணைந்து அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபில்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (15) அக்கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது முஹம்மத் நிப்லாத் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் அட்டாளச்சேனை கோணவத்தையைச் சேர்ந்த அயாத்து முஹம்மது சம்சுதீன், அப்துல் ரகுமான் அனீசா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவவார்.
அல்-ஹாபிழ் முஹம்மத் நிப்லாத் அவர்களை நாமும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம். அல்ஹம்தூலில்லாஹ்... இவரின் ஈருலக வெற்றிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.
இவருடைய முயற்சிக்கு உதவியாக இருந்த அவருடைய பெற்றோர், ஷர்கியா அறபுக் கல்லூரியின் ஹிப்ளுப் பிரிவு உஸ்தாத் அல்-ஹாபிழ் பைசால் (மௌலவி) உள்ளிட்ட அத்தனை உஸ்தாத்மார்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
செக்டோ ஸ்ரீலங்கா
28/06/2023
எமது செக்டோ ஸ்ரீலங்கா அனுசரணையுடன் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதன் 42வது ஆண்டு நிறைவினையொட்டி, நடாத்திய மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி சம்பியனாக தெரிவாகியது.
இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்ட செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் சம்பியனாக தெரிவாகிய சோபர் அணியின் தலைவர் அக்ரமிடம் சம்பியன் கிண்ணத்தினை வழங்கிவைத்த போது...
19/06/2023
செக்டோ ஸ்ரீலங்கா அனுசரணையுடன் அட்டாளைச்சேனையில் மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டி
அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதன் 42வது ஆண்டு நிறைவினையொட்டி, மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது.
குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு எமது செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பு பிரதான அனுசரணை வழங்குகின்றது. எமது அமைப்பு அதற்குரிய நிதியினை நியு ஸ்டார் விளையாட்டு கழகத்திடம் நேற்று (18) உத்தியோகபூர்வமாக கையளித்தது.
எமது அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், அமைப்பின் பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பொருளாளர் எம்.பீ.கியாஸிடம் ரூபா 60,000 பெறுமதியான காசோலையினை கையளித்தார்.
இந்நிகழ்வின் போது எமது அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ், கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான், நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எச்.அஸ்லம், முகாமையாளர் ஏ.எல்.புஹாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எமது செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் மற்றும் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஏ.நௌஷாட் (றிம்ஸி), எஸ்.எல்.முனாஸ் (Ex.Mps), எஸ்.எல்.நிலாம் ஆகியோரின் பங்களிப்புடன் குறித்த நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
02/06/2023
அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு: பாடசாலை சமூகம் பாராட்டு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற Olympiad போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Olympiad போட்டி அண்மையில் இடம்பெற்றது. மேற்குறித்த போட்டி நிகழ்ச்சியில் அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட ஜே.இஸ்ஸத் பானு, எம்.எம்.அஹமட் ஆகியோர் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.
குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றிபெற்று தமது வலயத்திற்கும் பாடசாலைக்கும், பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
22/05/2023
பாடசாலையின் குடிநீர், மின்சாரம் மற்றும் டேட்டா பட்டியல்களை செலுத்தி முன்மாதிரியாக செயற்பட்ட பழைய மாணவர்கள்
அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயத்தின் குடிநீர், மின்சாரம் மற்றும் டேட்டா பட்டியல்களின் நிலுவைத் தொகையாக காணப்பட்ட சுமார் 77 ஆயிரம் ரூபாவினை அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் செலுத்தியுள்ளனர்.
மேற்குறித்த பட்டியலின் நிலுவைத் தொகையினை பழைய மாணவர்களான ஏ.ரீ.றியாஸ், எஸ்.எல்.முஸம்மில், சமீம், ஏ.நௌஷாட் (றிம்சி), அசார் ஆகியோர் இணைந்து செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சகோதர்கள் கடந்த காலங்களிலும் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தங்களது சொந்த நிதியில் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்.
அந் நூர் மகா வித்தியாலயத்தின் தேவைகளை அறிந்து எமது பிரதேச கல்வி அபிவிருத்திக்கு பங்காற்றிவரும் எமது அன்புச் சகோதரர்களுக்கு செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.