03/06/2026
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்த வேண்டும்!
==================================
மதுரையில் தெய்வத் தமிழ்ப் பேரவை
செயற்குழுவில் தீர்மானம்!
==================================
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில், மதுரை பிரேம் நிவாசு விடுதியில், நேற்று 02.06.2026 காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்றது.
தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஐயா சித்தர் மூங்கிலடியார், ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), திருவில்லிப்புத்தூர் - தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், ஆசீவக சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளி, செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசன், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க. முருகன், விராலிமலை வே.பூ. இராமராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன், பி. தென்னவன் உள்ளிட்டோரும் ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
-----------
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
திருக்குடமுழக்கை தமிழிலேயே நடத்த வேண்டும்!
சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் 2026 செப்டம்பரில் (17.09.2026) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குடமுழுக்கு விழாவை, முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கோருகிறது.
ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழில் பாதி – சமற்கிருதம் மறுபாதி என குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென பலமுறை தீர்ப்பளித்துள்ளது. அண்மையில், 21.04.2026 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரி கரூர் வழக்கறிஞர் இரா. இராசேந்திரன் தொடுத்த வழக்கில் (வழக்கு எண்: W.P. (MD) No: 11386 of 2026) தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள், கருவறை – வேள்விச் சாலை – கோபுரக் கலசம் ஆகிய முகாமையான மூன்று நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டுமெனக் கூறி வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்து.
எனவே, தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, இத்தீர்ப்பை ஏற்று, சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட முன் வர வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்திக் கோருகிறது!
தீர்மானம் – 2
-----------
தமிழ் மந்திர வழிபாட்டுக்கு
தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்!
தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் அனைத்தும் அருளாளர்களாலும், நாடாண்ட மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரிகமும் திருக்கோயிலை மையமாக வைத்துத் தோன்றிய நாகரீகம். கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்கள் என்று குன்றக்குடி அடிகளார் உரைப்பார்கள். ஊரின் தலைமைச் செயலகமே திருக்கோயிலாக இருந்தது.
காலங்காலமாக தமிழ்நாட்டில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. தேவாரம் பாடிய சுந்தரர், “அர்ச்சனைப் பாட்டும் தமிழே” என்றார். “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே” என்றார் திருமந்திரத்தில் திருமூலர்.
நாளடைவில் வழிபாடுகள் யாவும் வடமொழி மயமாகிவிட்டன. இந்நிலையில், பக்தர்களின் வழிபாடுகள் - திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெற வேண்டும் என்பது அடியார்களாலும், பத்திமை உள்ளம் கொண்ட பெரியோர்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வகையில், தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களில் அன்றாட வழிபாட்டையும், குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் தமிழில் நடத்த வேண்டுமென்பது தமிழ் மக்களின் பெரு விருப்பமாகும். அதை நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, இதனை ஏற்று - தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை – வழிபாட்டைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றிட வேண்டும். வேண்டி விரும்பிக் கேட்போருக்கு மட்டுமே சமற்கிருத மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வேண்டும்.
தீர்மானம் – 3
-----------
வடலூர் வள்ளலார் பெருவெளியில் தோண்டப்பட்ட
குழிகளை உடனடியாக மூட வேண்டும்!
வடலூரில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் ஆன்மிகத்தை விளக்கும் அடையாளமாக விளங்கி வந்த வடலூர் வள்ளலார் பெருவெளியை சிதைத்து, அங்கே கட்டடங்கள் எழுப்பி சீரழிக்கும் பணியை கடந்த தி.மு.க. ஆட்சி செய்தது. தெய்வத் தமிழ்ப் பேரவையும், வள்ளலார் பணியகமும் கடும் போராட்டங்களை நடத்தியும், வழக்குத் தொடுத்தும் அப்பணிகளை தடுத்து நிறுத்தியது.
தற்போது, தி.மு.க. அரசு அகற்றப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், இச்சிக்கலில் தலையிட்டு, வள்ளலார் அன்பர்கள் ஒன்றுகூட தடையாக பெருவெளியில் ஏற்கெனவே தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும். கட்டங்கள் எழுப்ப வேண்டுமெனின், பெருவெளிக்கு அப்பாலுள்ள இடங்களை எழுப்பிக் கொள்ளலாமே தவிர, பெருவெளியில் எக்காரணம் கொண்டும் கட்டடங்களை எழுப்பக் கூடாதென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 4
-----------
பாண்டிய மன்னரை இழிவுபடுத்திய
ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணனை கைது செய்ய வேண்டும்!
மதுரையை ஆண்ட கூன் பாண்டிய மன்னன் சமண நெறியிலிருந்து, திருஞானசம்பந்தரால் சைவ வழிபாடு மேற்கொண்டு, தனது கூன் நிமிர்ந்து - நின்றசீர் நெடுமாறனாகி சைவ நெறிக்கு மாறினார் என்பது இலக்கியங்கள் காட்டும் உண்மைச் செய்தியாகும்.
இந்நிலையில், கூன் பாண்டிய மன்னனை “லொடுக்கு பாண்டி” எனக் கூறி இழிவுபடுத்தியுள்ளார் வரலாற்று ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணன் அவர்கள். மாற்றுத்திறனாளிகளைக் கூட அவ்வாறு இழிவுபடுத்தக் கூடாது எனும்போது, வரலாற்றில் வாழ்ந்த தமிழ் மன்னரை இவ்வாறு இழிவுபடுத்தியுள்ள ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணன் அவர்கள் மீது உரிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, தமிழ்நாடு காவல்துறை அவரைக் கைது செய்ய வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 5
-----------
அனைத்துச் சாதியனர் அர்ச்சகராக அமர்த்திட உள்ள
சட்டத் தடைகளை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்!
கடந்த 22.08.2022 அன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முனீசுவரநாத் பண்டாரி - என் மாலா அமர்வு, தமிழ்நாட்டிலுள்ள நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டுள்ள தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் எது ஆகமக் கோயில் – எது ஆகமம் இல்லாத கோயில் எனக் கண்டறிவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தததுடன், அக்குழுவின் முடிவு வரும் வரை அனைத்துச் சாதியினர் அர்ச்சகராக அமர்த்திடத் தடை விதித்தது.
அனைத்துச் சாதியினரை அர்ச்சகர்களாக அமர்த்திட மறைமுகமாகத் தடை செய்யும் வகையில் பிராமண அர்ச்சகர்களின் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்ட இந்த தேவையில்லாத ஆய்வு முயற்சியை தி.மு.க. அரசு ஒப்புதல் கொடுத்து ஏற்றுக் கொண்டதை தெய்வத் தமிழ்ப் பேரவை கடுமையாகக் கண்டித்தது.
தற்போது இக்குழுவால், பிராமணரல்லாத பிற சாதியினரை அர்ச்சகராக அமர்த்த முடியவில்லை. எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இத்தடையை நீக்கும் வகையில், மேல் முறையீடு செய்து, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக அமர்த்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 6
-----------
வடமொழியாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு
ஊர்ப் பெயர்கள் – இறைவன் – இறைவிப் பெயர்களை
தமிழிலேயே திரும்ப மாற்றிட வேண்டும்!
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்ப் பெயர்கள் மற்றும் திருக்கோயில்களில் உள்ள இறைவன் – இறைவிப் பெயர்கள் பலவும், அயலார் ஆட்சிக்காலத்தில் வடமொழியில் மாற்றப்பட்டன. அண்ணாமலையார் - அருணாச்சலேசுரர் எனவும், தீயாடியப்பர் அக்னீசுவரர் எனவும், கருகாத்த நாயகி – கர்ப்பரட்சாம்பிகை எனவும் இவ்வாறே மாற்றப்பட்டன. அதுபோல், திருமறைக்காடு – வேதாரணியம் என்றும், மயிலாடுதுறை – மாயவரம் என்றும் மாற்றப்பட்டது இவ்வாறே!
எனவே, தமிழ்நாடு அரசு இந்த வரலாற்றுச் செய்திகளை உணர்ந்து, வடமொழியாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்கள் – இறைவன் – இறைவிப் பெயர்களை தமிழிலேயே திரும்ப மாற்றிட உரிய குழு அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது!
கோரிக்கை
-----------
செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத் சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு நகலும், அதற்கான கோரிக்கை மனுவும் கோயிலிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. இணை ஆணையர் சென்னைக்கு சென்றுள்ள நிலையில், மேலாளர் இம்மனுவை பெற்றுக் கொண்டார். தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் சிம்மம் சத்தியபாமா அம்மையார், சிவ. வடிவேலனார், மோகனசுந்தரம் அடிகளார், சுந்தரராசன், க. முருகன் உள்ளிட்டோர் இம்மனுவை நேரில் வழங்கினர்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 98419 49462, 94439 18095
================================

02/06/2026
31/05/2026
31/05/2026
30/05/2026