20/04/2026
ஏழாம் நாள் பரப்புரை:
மயிலாப்பூரில் பாசிச பாசகவை எதிர்த்தும்
திமுகவை ஆதரித்தும் பரப்புரை
ஏழாம் நாள் - 19-04-2026
பெரும் உற்சாகத்துடன் தொடர்ந்தது பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு 2026-இன் ஏழாம் நாள் பரப்புரை. 19.04.2026 மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் சாலையில் பிரச்சாரம் தொடங்கியது. திவிக தோழர் சுகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கத் தோழர்களுடைய கலைக்குழுவின் பறையிசை சனாதானத்தை வேரறுப்போம் என பறைசாற்றியது. அதற்கு பின் சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர் ரமணி தொடர் முழக்கமிட, நாங்களும் எழுச்சியுடன் முழக்கமிட்டோம். அதைத் தொடர்ந்துர் தோழர் ஜாஹிர், தோழர் கதிர் இருவரும் அரங்கேற்றிய நையாண்டி நிஜ நாடகத்தால் நிகழ்வு களைகட்டியது. அதற்கடுத்ததாக தமிழ் மக்கள் உரிமை முன்னணியை சேர்ந்த தோழர் தியாகு சிறப்புரை ஆற்றினார். நாங்கள் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும் அல்ல, திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களும் அல்ல. நாங்கள் பதவியைத் தேடுகின்ற இயக்கங்கள் அல்ல. போராட்ட இயக்கங்கள். போராட்டங்கள் இல்லையெனில் திண்டாட்டங்கள் தீராது என்ற நிலைப்பாடு உடையவர்கள். போராட்டத்தை திமுக முன்னெடுத்துள்ளது. அநீதியான முறையில் பாஜக தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற முயன்ற போது, தேர்தல் அரசியல் முக்கியமல்ல, தமிழ்நாட்டின் தன்மானம் தான் முக்கியம், என வீதியில் இறங்கி போராடுகிற முதல்வரை ஆதரிக்கவேண்டியதை நம் கடமையாக கருதுகிறோம். இந்த தேர்தல் களத்தை போர்க்களத்துடன் ஒப்பிடலாம். இங்கு தேர்தல் பிரச்சாரம் அமைதியாக நடக்கிறது. ஆனால் உலக அளவில் அமைதி நிலவவில்லை. ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட்டதில் 170 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் போர் தீர்ந்த பாடில்லை. பாகிஸ்தான் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மோடியை உலகத்தலைவர்களுக்கு டீ போட்டுக் கொடுக்க சொல்லலாம். ஃபிப்ரவரி 28 அன்று மோடி இஸ்ரேல் தலைநகரில் நெதன்யாஹூவிடம் கொஞ்சிக் குலாவுகிறார். இஸ்ரேல் தான் தந்தையர் நாடு என்கிறார். மத்திய ஆசியாவில் பிழைக்கப்போன இந்தியர்களைப் பற்றி மோடிக்கு கவலையில்லை. என்ன விளைவுகளை மோடி ஆட்சி ஏற்படுட்டுள்ளது ரூபாய் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 95 ரூபாயாக வீழ்ந்துள்ளது. உலகமே பற்றி எரியும் போது மோடியும், அமித்ஷாவும் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்பை மோசடி செய்த தேவநாதன் போன்ற ஊழல்வாதிகளின் பொய்க்காவலாராக இருக்கும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என கருத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியார் அம்பேத்கரிய இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தனசேகர் பேரறிஞர் சின்னம் தானுங்க என்ற பாடலை சிறப்பாகப் பாடினார். அதற்கடுத்ததாக இந்திய ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. உங்களைப் போன்றவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் விவசாயிகள், கடை வியாபாரிகள் போன்ற எளிய மக்களின் பிரதிநிதிகள். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது 71 விவசாயிகள் இறந்துபோனார்கள். இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்ற முயன்ற போது எடுபிடி எடப்பாடியும், அன்புமணியும் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்காவிட்டால் நாம் 71 விவசாயிகளைப் பலி கொடுத்திருக்கமாட்டோம். இந்த பாஜக அரசு மக்களுக்கு விரோதமாக, தொழிலாளர்களுக்கு விரோதமாக நடந்துகொள்கிறது. நாம் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் கோவில்களும் உள்ளன, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அதிகமாக உள்ளனர். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக நல்லிணக்கத்தோடு இருந்துள்ளது. பாஜக நமது ஒற்றுமையை சீர்குலைக்கிறது. தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்ட சர்ச், பள்ளிவாசல் என 1000 இடங்களை குறிபார்த்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜகவுக்கு வாக்களிக்கவேக் கூடாது என எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் நன்றி உரை வழங்கினார்.
அதற்கடுத்ததாக விசாலாட்சி தோட்டத்திலும் பிரச்சாரம் தொடர்ந்தது. பறையிசை, முழக்கம், நையாண்டி நிஜ நாடகத்தைத் தொடர்ந்து திவிக தோழர் சுகுமார் வரவேற்புரை வழங்கினார். அதன் பிறகு பாட்டாளி வர்க்க சமரன் அணியைச் சேர்ந்த தோழர் மனோகரன் சிறப்புரை ஆற்றினார். 23ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் ஆறு அணிகள் போட்டியிடுறாங்க. அதில் ரெண்டு அணி சொத்தை. ரெண்டு அணி ஓட்டைப் பிரிப்பவர்கள். ரெண்டு அணிகளுக்குள் தான் போர் நடக்குது. 13 ஆண்டுகளாக தொடரும் ஃபாசிஸ பாஜகவின் ஆட்சி இந்தியாவை இருண்ட காலத்துக்குள் தள்ளுகிற சர்க்காராக உள்ளது. அதிமுகவை லேபிளாக பயன்படுத்தி, அதிமுக முதுகில் ஏறி தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது பாஜக. அதை தவிடு பொடியாக்கவேண்டிய தேர்தல் இந்த தேர்தல். அமெரிக்கா போட்ட வரியை மோடி ஏற்றுக்கொண்டதால் திருப்பூர் அழிந்துள்ளது, பல தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நூறு நாள் வேலையை ஒழித்துக்கட்டிய பாஜக இன்னைக்கு வந்து ஓட்டு கேக்குதுன்னா அதை தோற்கடிக்கவேண்டாமா. ஊழலில் உறைந்த பாஜகவிற்கு திமுகவையோ, தமிழ்நாட்டின் அரசாங்கத்தையோ விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. மதவெறியை மாய்க்க, அமெரிக்க அடிமைத் தனத்தை ஒழிக்க சீர்திருத்தம் தொடர, ஜனநாயகம் தொடர 234 தொகுதிகளிலும் நாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஜெயிக்கவைக்கவேண்டும் என கருத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து திவிக ஊடகப் பிரிவைச் சேர்ந்த தோழர் விஜி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் பாஜக அரசு 26 பைசா தான் திருப்பிக் கொடுக்குது. அந்த 26 பைசாவை வைத்துத் தான் இந்த மாதிரி ரோடு போட்டுருக்காங்க, சிறப்பாக மருத்துவமனை கட்டியிருக்காங்க. சிறப்பான மருத்துவக் கல்லூரி கட்டி மிகச்சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியிருக்காங்க. அந்த கல்லூரியில் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களும் படிக்கனும்னு பாஜக சொல்லுது. மதுரையில எய்ம்ஸ் கட்டித்தர்றதா சொல்லி ஒரு செங்கலைத் தான் கொடுத்துருக்காங்க. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து மதுரைக்கும், கோவைக்கும் மெட்ரோ தேவை இல்லைனு மறுத்துட்டாங்க. தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு கொஞ்சம் கூட ஒரு குண்டு மணி அளவுக்குக் கூட செயல்படுத்தாம பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஏமாத்திட்டு இருக்கு. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியா தமிழ்நாடு போராடுது. திமுக மக்களுக்கு சிறப்பான திட்டங்களை கொடுத்துருக்கு. பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம் எனக் கேட்டுக்கொண்டார். இறுதியாக திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.
இவ்வாறு மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த செயல் துடிப்புள்ள தோழர்களின் பரப்புரை இன்றுடன் நம் மயிலாப்பூர் தொகுதி மக்களின் பேராதரவுடன் இனிதே நிறைவுற்றது.
இன்றைய பரப்புரையில் பங்குபெற்ற அமைப்புகள் - தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி , தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த அமைப்புகளும் அகில இந்திய மக்கள் இயக்கம், இந்திய ஒற்றுமை இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்குபெற்றன. ஏழாம் நாள் பரப்புரையில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட இந்த பிரச்சாரப் பயணம் மயிலாப்பூரை மணிப்பூராக விடாமல் தடுத்து, மதவெறியை மாய்த்து, தமிழ்நாட்டில் பாஜக இல்லாத சட்டமன்றம் அமைய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று சுடர்விட்டு ஒளிர்கிறது. தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கான எங்களது பயணம் தொடரும்.
#வேலு4மயிலை
#வேலு4மயிலாப்பூர்

20/04/2026
20/04/2026
19/04/2026
19/04/2026
18/04/2026
18/04/2026
18/04/2026
18/04/2026