14/01/2025
*மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோம்*
சாதாரண மனிதர்கள் இறைவனுக்கும் அவன் படைத்த இயற்கைக்கும் நன்றி பாராட்டுவதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கிய சாதனங்களே சடங்குகளும், பண்டிகைகளும், விழாக்களும்!மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளவும், உயிர் கலந்து அன்பு செய்யவும் அடித்தளமாவதே பண்டிகைகளின் முதல் நோக்கம்.
போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் நாம் கொண்டாடும் பண்டிகை ஆழ்ந்த அர்த்தம் உடையது. பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை. மார்கழி மாதம் முடியும் நாளில் நாம் கொண்டாடும் போகி அன்று வேண்டாத பொருள்கள் தீ மூட்டி எரிக்கப்படுகின்றன. புறத்தில் வேண்டாத பொருள்களை எரிப்பது போன்றே, நம் அகத்தில் மண்டிக் கிடக்கும் வெறுப்பு, பொறாமை, கோபம் போன்ற நம் வளர்ச்சிக்கு வேண்டாத தீய உணர்வுகளை ஞானத் தீயால் எரித்து சிந்தையை சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் போகிப் பண்டிகையின் உள்ளார்ந்த கருத்து.
சித்தம் சுத்தமான நிலையில் தைப்பொங்கலை வரவேற்க நாம் தயாராக வேண்டும். பொங்கல் திருநாள் சூரியனுக்கு நாம் நன்றி செலுத்தும் நாள். வேத காலம் தொட்டே சூரிய வழிபாடு தொடர்கிறது. சிலப்பதிகாரம் 'ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்' என்று கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.
மறுநாள் மாட்டுப் பொங்கல். நம் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் துணை நிற்கும் மாடுகள் நமக்கான தெய்வங்கள். இறைவனுடைய திருவுருவை அலங்கரிப்பது போன்றே, மாடுகளையும் அலங்கரித்து வழிபடுவதன் மூலம் நம் நன்றியை வெளிப்படுத்துகிறோம்.
மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல். உறவுகளைக் கண்டு மகிழ்வதற்காக உருவான நாள் இது. எந்த மனிதனும் தனியாகப் பிறந்து, வளர்ந்து, பிறர் துணையின்றி வாழ்ந்து, கல்லறையில் ஒரு நாள் கண் மூடிவிட முடியாது. பாலை நிலத்து ஒற்றைப் பேரிச்ச மரமாய் தனித்து நிற்காமல், ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் கிளை பரப்பி நிற்பதுதான் மனித வாழ்வில் உன்னதம். உறவுகளுடன் கூடி வாழ்வதும், அந்த உறவுகளைத் தேடிச் சென்று கண்டு மகிழ்வதும் தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்றும். அதற்காகவே வாய்த்ததுதான் காணும் பொங்கல்.
புத்தாடை அணிந்து, உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி ததும்ப, உறவுகள் கூடிக் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தீமைகளைச் சுட்டெரிக்கவும், நன்றியை வெளிப்படுத்தவும், உறவுகளைப் போற்றி மகிழவும் உருவானது என்று உள்ளத்துள் உணரும்போது தான், நம் மூதாதையர் வகுத்துக் கொடுத்த பண்பாட்டுப் பாரம்பரியப் பண்டிகைகளின் பெருமை நமக்கு புரியும்.
தமிழருவி மணியன்

01/01/2025
25/12/2024
03/07/2024
02/07/2024
27/06/2024
23/06/2024
23/04/2024